×

வாஸ்து தோஷம் போக்கும் கோயில்

திருச்சி

வாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பூலோக சுவாமிநாத ஆலயம் என்றழைக்கின்றனர். இங்கும் மாசி மகத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீடு கட்டுதல், வாஸ்து பகவான் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்
படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே இடது புறம் விநாயகர், வலது புறம் முருகன் மற்றும் கருப்பண்ணசாமி  போன்ற சந்நதிகள் உள்ளன. கோபுரத்தைத் தாண்டியதும் அகன்ற பிராகாரமும், கொடிமரம், நந்தியும் உள்ளன.

அடுத்துள்ள  யாக மண்டபத்தின் வலது புறம் இறைவி ெஜகதாம்பிகையின் சந்நதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் கரங்களில் பத்மம் மற்றும் அல்லி மலரைத் தாங்கியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன்  திருவருட்பாலிக்கிறாள்.
முன்புறம் இரு துவார பாலகர்கள் வீற்றிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம். மகாமண்டப நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி- தெய்வானையுடன், முருகனும் அருட்பாலிக்கின்றனர்.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பூலோகநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருட்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும், பிரம்மாவும் வீற்றுள்ளனர்.. ஆலய திருச்சுற்றில் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், சப்த கன்னியர், நாகாபரண விநாயகர், காசி விஸ்வநாதர், ஆஞ்சநேயர், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோரும், வடக்கில் சண்டீகேஸ்வரர் சந்நதியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும், கால பைரவரும் வீற்றருள்கின்றனர்.

ஆலயத்தில் இருக்கும் தல விருட்சமான வன்னி மரத்தையும், அருகே இருக்கும் வன்னிமர விநாயகரையும் வலம் வந்து வேண்டிக்கொண்டு, அருகே இருக்கும் கன்னிமார் களையும் வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர்
பக்தர்கள்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீபூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

தொகுப்பு: கலைச்செல்வன்

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்